இருளர்களை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு


இருளர்களை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கிய  கல்குவாரி உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை  விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
x

இருளர்களை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வேட்டைக்காரன்பட்டியில் உள்ள ஒரு கல்குவாரியில் சிலர் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு பணியாற்றி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 30.7.2010 அன்று அப்போதைய செஞ்சி தாசில்தாராக பணியாற்றிய ஷியாமளா தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த கல்குவாரிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த கல்குவாரியில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 29 பேர் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இருளர் வகுப்பை சேர்ந்த அவர்கள் 29 பேரையும்

சட்டவிரோதமாக மிக குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக கல்குவாரியில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களான மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 58), அவரது மகன் தமிழ்செல்வன் (38) ஆகியோர் வேலை வாங்கி வந்தது தெரிந்தது.

கல்குவாரி உரிமையாளருக்கு சிறை

இதையடுத்து அவர்கள் 29 பேரையும் அதிகாரிகள் மீட்டு திண்டிவனம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து ஷியாமளா, வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணேசன் இறந்து விட்டார். பின்னர் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாட்டப்பட்ட தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்செல்வன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.


Next Story