கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை


கடலூர் மத்திய சிறையில்  கைதி தூக்குப்போட்டு தற்கொலை
x

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்த 43 வயதுடைய தொழிலாளி, 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து தொழிலாளியை, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காரணத்தால், அவரை பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவரை ஜாமீனில் எடுக்கவும் யாரும் முயற்சி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் கடலூர் மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள ஒரு மரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த சிறைக்காவலர்கள் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மத்திய சிறை வளாகத்தில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story