கோவையில் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் - முதல் தகவல் அறிக்கை வெளியானது


கோவையில் தனியார் கல்லூரி மாணவர்  ராகிங் செய்யப்பட்ட விவகாரம் - முதல் தகவல் அறிக்கை வெளியானது
x

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரை தாக்கி ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை,

கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டையடித்து ராகிங் செய்துள்ளனர். ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கைது செய்யப்பட்ட அந்த 7 மாணவர்களையும், கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

சீனியர்கள் பணம் கேட்டால் இல்லை என சொல்லுவியா என்று சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்துள்ளார். 5 மணி நேரம் வெளியே விடாமல் இரவு 11.30 மணி முதல் காலை 4 மணி வரை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார்கள் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்துள்ளார்.

போலீசார் அந்த 7 மாணவர்களின் மீது ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story