போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகை - கவர்னர் அறிவிப்பு


போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகை - கவர்னர் அறிவிப்பு
x

பல வகையான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், 'நான் விரும்பும் சுதந்திரப்போராட்ட வீரர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர்.

அதே போல் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் '2047-ல் இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.

பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மொத்தம் 12 மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுத்தொகை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது சான்றிதழ்களுடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story