இணையவழி ஆதாய விளையாட்டுக்கான சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது


இணையவழி ஆதாய விளையாட்டுக்கான சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது
x

இணையவழி ஆதாய விளையாட்டுக்கான சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இணைய வழியாக கலந்துகொண்டார்.

அப்போது இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, இந்த கூட்டத்திற்கான பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக வலிமையான கருத்துகளை எடுத்து வைத்தார்.

இணையவழி சூதாட்டமான இணையவழி பந்தயம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. சட்ட திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

தமிழகத்தின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஏற்றபடி ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இணையவழி பண விளையாட்டுக்கான ஜி.எஸ்.டி. சட்ட வரையறையில், தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அல்லது வாய்ப்பின் அடிப்படையிலான விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டு வரக்கூடாது. முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் இந்த மாற்றங்கள் சேர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் கவுன்சிலால் உறுதியளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி கமிஷனர் தீரஜ் குமார் மற்றும் வணிக வரித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story