திருத்தணி முருகன் கோவிலில் 2-வது மலைப்பாதை அமைக்கும் திட்டம்: வனம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


திருத்தணி முருகன் கோவிலில் 2-வது மலைப்பாதை அமைக்கும் திட்டம்: வனம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
x

போக்குவரத்து திருத்தணி முருகன் கோவிலுக்கான 2-வது மலைப்பாதை அமைக்கும் திட்டம் அமைப்பது தொடர்பாக வனம், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

மாற்று மலைப்பாதை திட்டம்

திருத்தணி முருகன் கோவில், ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் தரிசனத்திற்கு வருகின்றனர். மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதிக்காக கோவில் நிர்வாகம் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை அமைக்கப்பட்டு அதன் மூலம் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக மலைக்கோவிலுக்கு வாகனங்கள் மூலம் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கும் ஒரே பாதை உள்ளதால் கிருத்திகை மற்றும் முக்கிய விழா நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 3 கிலோ மீட்டர் கடப்பதற்கு, பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதையடுத்து 2006-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட 2-வது மலைப்பாதை அமைக்கும் மாற்று மலைப்பாதை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து தமிழக அரசு மாற்று மலை பாதை திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் குழு அமைத்தது.

அதன்படி திருத்தணி கோவில் துணை ஆணையர் விஜயா, கோவில் பொறியாளர் வேல்முருகன், திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, வனத்துறை அதிகாரிகள் அருள்நாதன், ஓம்குமார், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் யாசர்அராபத், கிராம நிர்வாக அலுவலர் கவுரி, நில அளவையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் நேற்று மலைக்கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

அப்போது, மலைக்கோவில் இருந்து அமிர்தாபுரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, 10 மீட்டர் அகலத்திற்கு மலைப்பாதை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலையை அமைக்கும் பட்சத்தில் கர்நாடகா மாநிலம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தமிழகத்தில் ராணிப்பேட்டை வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருத்தணி நகரத்திற்கு உள்ளே வராமல் மாற்று மலைப்பாதை வழியாக சென்று முருகப்பெருமானை தரிசிக்கலாம். குறிப்பாக, மாற்று மலைப்பாதையால் திருத்தணி நகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


Next Story