திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவியேற்பு


திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவியேற்பு
x
தினத்தந்தி 28 Jun 2023 3:38 PM GMT (Updated: 29 Jun 2023 10:39 AM GMT)

திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

திருப்பூர்

பதவியேற்பு

திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினர்கள் என 18 பேர் தேர்வு செய்ய அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 8 உறுப்பினர்களுக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்து தேர்தலில் 8 பேர் வெற்றி பெற்று அறிவிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேரின் விவரம் வருமாறு:-

கவுன்சிலர்கள் கணேசன் (மடத்துக்குளம் பேரூராட்சி), கண்மணி (ஊத்துக்குளி பேரூராட்சி), கமலக்கண்ணன் (தாராபுரம் நகராட்சி), சிவப்பிரகாஷ் (அவினாசி பேரூராட்சி), பத்மாவதி (திருப்பூர் மாநகராட்சி), மாணிக்கம் (தளி பேரூராட்சி), மீனாட்சி (காங்கயம் நகராட்சி), யுவராஜ் (திருமுருகன்பூண்டி நகராட்சி), ராமதாஸ் (உடுமலை நகராட்சி), ராஜசேகரன் (பல்லடம் நகராட்சி), மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ரஞ்சிதம், ஜெயந்தி, சாமிநாதன், பானுமதி, கண்ணம்மாள், சக்திவேல், சிவபாலகிருஷ்ணன், சிவகாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா உள்ளார்.

ஒற்றுமையாக இருங்கள்

இந்தநிலையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு தலைவரான சத்யபாமா, திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, 'திருப்பூர் மாவட்டம் சிறப்படைய தேவையான திட்டத்தை வகுத்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அதற்கு உண்டான தொகையை நாம் பெற்று வர முடியும். இதற்கு 18 உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து, மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை தெரியப்படுத்தி ஒருமனதாக நிறைவேற்றி செயல்பட வேண்டும்' என்றார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் உடனிருந்தார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

பின்னர் திட்டக்குழு முதல் கூட்டம் நடைபெற்றது. புதிய திட்டக்குழுவை ஏற்படுத்தி உறுப்பினர்களை தேர்வு செய்து மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டக்குழுவில் அனைத்து துறைகளும் பங்கேற்று கடந்த 2021-22, 2022-23-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து அறிக்கையாக பெற்று அடுத்து வரும் கூட்டங்களில் விவாதம் செய்வது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story