புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு


புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:45 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குடிநீர் திட்டம்

கடந்த தி.மு.க. ஆட்சியில் சாயல்குடி அருகே நரிப்பையூர் கடல்நீர் நன்னீராக்கும் திட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது,

ஆனால் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிப்பு மேற்கொள்ளாததால் நரிப்பையூர் கடல் நீர் நன்னீராகும் திட்டம் முடக்கப்பட்டது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டு செல்லும் தண்ணீர் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு மக்களுக்கு சென்றடையாத நிலை ஏற்பட்டது. இது பற்றி அறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் குழாய் உடைப்புகள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

அரசாணை வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் கடல்நீர் நன்னீராகும் திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தினால் மட்டுமே முடியும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ேகாரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம் ஆகிய பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 2,306 ஊரக குடியிருப்புகள் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அமைச்சருக்கு நன்றி

நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர் வீதமும் பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சி எடுத்த பிற்படுத்தப்பட்டோர் நலன் கதர் கிராமத்தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story