கிருஷ்ணகிரி, ஓசூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, ஓசூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:47 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, சூளகிரியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய தலைவர் மதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மஞ்சுளா கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் பெருமாள் வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் ஒன்றிய செயலாளர் பொன்னி நன்றி கூறினார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்

இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெகதாம்பிகா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி புதிய காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்பட 9 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாநில துணைத்தலைவர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய செயலாளர் தனலட்சுமி, உள்பட நிர்வாகிகளும், சத்துணவு அமைப்பாளர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story