குடிசை மாற்று வாரிய கடைகளை இடிக்க எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்


குடிசை மாற்று வாரிய கடைகளை இடிக்க எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்
x

குடிசை மாற்று வாரிய கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னை அண்ணாநகர், நியூ ஆவடி சாலை, காந்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 470 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரத்துக்காக 72 கடைகளும் ஒதுக்கி தரப்பட்டது.

தற்போது இந்த குடியிருப்பு கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதால் அதை இடித்துவிட்ட புதிதாக கட்டிகொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட உள்ளது. ஆனால் இங்குள்ள 72 கடைகள் குறித்து எந்த தகவலும் பயனாளர்களுக்கு அரசு சார்பில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் முதல் கட்டமாக நேற்று காலை 72 கடைகளை இடிப்பதற்காக அண்ணா நகர் மணடல அதிகாரிகள், ஊழியர்கள், பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், வியாபாரிகளும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையிலான நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர். பின்னர் 72 கடைகளுக்கும் தகுந்த நிவாரணம் கிடைக்க வேண்டும் என கூறி வியாபாரிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அரசு மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல அதிகாரிகள் கூறியதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story