திருநின்றவூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


திருநின்றவூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x

திருநின்றவூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர் 8, 9, 10 ஆகிய 3 வார்டுகளிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்காக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரகாஷ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் டாஸ்மாக் கடை வரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ள பகுதி வழியாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் சென்று வருவதால் பல்வேறு சமூக விரோத செயல்களும், அசம்பாவிதங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது என கூறி பிரகாஷ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என முழக்கமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story