இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்
x

இலங்கை கடற்படையை கண்டித்து, ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையை கண்டித்து, ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ந்தேதி மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து நேற்று ராமேசுவரம் தங்கச்சிமடம் அருகே வலசை பஸ் நிறுத்தம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தலைமை தாங்கினார். மீனவர் சங்க நிர்வாகிகள் சேசூராஜா, எமரிட் மற்றும் ஏராளமான மீனவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்

இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டுவர வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தொந்தரவு இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தால் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.


Next Story