கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா


கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா
x

கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் கோவிலம்பாக்கம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு முழுவதும் துர்நாற்றம் வீசியது. அதில் இருந்து வரும் பூச்சிகள், வண்டுகளாலும், கொசு தொல்லையாலும் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த குப்பை முழுவதும் அகற்றப்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் வைத்து உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் முன்மாதிரி விளையாட்டு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்காவில் விளையாட்டு அரங்கம், கலைக்கூடம், சிறார் விளையாட்டு பகுதி, நடைபயிற்சி தடம், டென்னிஸ், வாலிபால் கோர்ட், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக உள்ளது.

இந்த பூங்கா ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை ஊராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.

பூங்கா அமைப்பதற்கான மாதிரி வரைபடமும் தயாரிக்கப்பட்டு விட்டது. பூங்கா அமைக்கும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி 6 மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story