சமூகநீதியின் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறேன் - பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து


சமூகநீதியின் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறேன் - பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து
x

ஸ்ரீபதி உரிமையியல் நீதிபதியாக பதவி வகிக்க உள்ளதை அறிந்து, வாழ்த்தி, மகிழ்கிறேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை,

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை - என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப, "அழிவில்லாத சிறந்த செல்வம், கல்விச் செல்வமே" என்பது புலனாகிறது. அத்தகைய கல்விச் செல்வத்தை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை என, "முத்தமிழறிஞர் கலைஞர்" பிறப்பித்த ஆணையின் வழியே படித்து, எனது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் புலியூர் என்ற கிராமத்தில் வசிக்கும், ஸ்ரீபதி வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில், வெற்றிப் பெற்று, "உரிமையியல் நீதிபதியாக" பதவி வகிக்க உள்ளதை அறிந்து, வாழ்த்தி, மகிழ்கிறேன்.

தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கட்டி காத்து வரும் சமூகநீதியின் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறேன். உங்களது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற, குடும்பத்தினருக்கு என்னுடைய மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story