சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x

பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் 24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு இன்று (சனிக்கிழமை) விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

பூமியில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து திட்டமிட்டப்படி இன்று (சனிக்கிழமை) பகல் 11.50 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story