பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? வாகன ஓட்டிகள் கருத்து


பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? வாகன ஓட்டிகள் கருத்து
x
தினத்தந்தி 26 May 2023 9:00 PM GMT (Updated: 26 May 2023 9:00 PM GMT)

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? என்பது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள், வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில் தான் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?

பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

கலப்படம் இருக்கிறதா?

கம்பத்தை சேர்ந்த தனியார் தொலைதொடர்பு நிறுவன ஊழியர் ராகவானந்தன் கூறும்போது, "பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நவீன தொழில்நுட்பங்களின் கீழ் வந்து விட்டன. அதனால் அளவு குறைவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் எந்திரத்தை கவனித்தால் போதுமானது. ஆனால், பெட்ரோலில் கலப்படம் இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை. முன்பு போல் அதிக கிலோமீட்டர் கிடைப்பது இல்லை. அதற்கு பெட்ரோல் விற்பனையாளர்களை குறைகூற முடியாது. உற்பத்தி நிறுவனங்கள் தரமாக வினியோகம் செய்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். அதேநேரத்தில் சில பெட்ரோல் பங்குகளில் விலை விவரங்கள் தெளிவாக தெரிவது இல்லை. அதை சரிசெய்ய வேண்டும்" என்றார்.

முறைகேடு

மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி வேல்முருகன் கூறும்போது, "சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பும் போது வாகனம் நல்ல முறையில் ஓடுகிறது. ஒருசில பங்குகளில் பெட்ரோல் போட்டு ஓட்டும் போது வாகனத்தில் சத்தம் மாறுபடுவது போல் உணர முடிகிறது. ஒருவேளை கலப்படம் செய்யப்படுகிறதா? என்றும் தோன்றும். கலப்படம் இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சில பெட்ரோல் பங்குகளில் எந்திரத்தில் பூஜ்ஜியம் பார்க்கும் முன்பே பெட்ரோல் போடத் தொடங்கி விடுகின்றனர். இதனால், முறைகேடு நடக்கவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

பூஜ்ஜியத்தை பார்க்க வேண்டும்

பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பெட்ரோல் பங்கு ஊழியர் ரேணுகாதேவி கூறும்போது, "நான் 13 ஆண்டுகளாக பெட்ரோல் பங்குகளில் வேலை பார்த்து வருகிறேன். பெட்ரோல் நிரப்ப வரும் ஒவ்வொருவரிடமும் மீட்டரில் பூஜ்ஜியம் இருப்பதை முதலில் பார்க்குமாறு கூறுகிறோம். பூஜ்ஜியத்தில் தொடங்கி அவர்கள் கேட்கும் தொகை அல்லது அளவில் பெட்ரோல் நிரப்புகிறோம். அதில் முறைகேடு நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. அந்த மீட்டரில் எவ்வளவு தொகைக்கு அல்லது எவ்வளவு லிட்டர் தேவை என்பதை செட் செய்து விட்டால், அந்த அளவு மட்டுமே பெட்ரோல் வரும். அதில் குறைய வாய்ப்பு இல்லை. அனைத்து பெட்ரோல் விற்பனை நிறுவனங்களும் எண்ணெய் நிறுவனத்துடன் கணினி வாயிலாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால், சிறு தவறு நேர்ந்தால் கூட உடனடியாக தெரிந்துவிடும்" என்றார்.

வாய்ப்பே இல்லை

பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பெட்ரோல் பங்கு விற்பனை மேலாளர் ரமேஷ்குமார் கூறும்போது, "பெட்ரோல், டீசலில் கலப்படம் என்பதற்கான வாய்ப்பே இல்லை. பெட்ரோலில் கலப்படம் செய்யவே முடியாது. முன்பு ஒரு காலத்தில் டீசலுடன் மண்எண்ணெயை சிலர் கலப்படம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது டீசல் விலையை விட வெளிச்சந்தையில் மண்எண்ணெய் விலை அதிகம். அதனால், கலப்படம் என்பதற்கே வாய்ப்பு இல்லை. பெட்ரோல் நிரப்பும் அளவிலும் தவறு செய்ய முடியாது. பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் மீட்டரில் பூஜ்ஜியத்தை பாருங்கள் என்று சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். பெட்ரோல் பங்குகள் உள்ள பம்புகள் அனைத்தும் 'ஆட்டோ மெஷின்' என்ற தானியங்கி எந்திரம் மூலம் இணைக்கப்பட்டுளள்ன. ரூ.100-க்கு பெட்ரோல் அல்லது ஒரு லிட்டர் பெட்ரோல் என்று செட் செய்து விட்டால் அதே அளவு பெட்ரோல் பம்பில் இருந்து வெளியேறி வாகனத்தில் நிரப்பப்படும். செட் செய்த அனைத்து பெட்ரோல் அல்லது டீசல் வெளியேறும் முன்பு அவற்றை நிறுத்தினால் உடனடியாக அந்த பம்பு செயல்பாடு நின்று விடும். அதை மீண்டும் சரி செய்ய வேண்டும் என்றால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தான் வர வேண்டும். மீட்டரில் செட் செய்யாமல் நிரப்புவதாக இருந்தால் வாடிக்கையாளர் கேட்கும் அளவை விட சில மில்லி கூடுதலாக தான் நிரப்பப்படும். பணியாளர்கள் அவ்வாறு கவனக்குறைவாக செயல்பட்டால் அதனால் பங்குகளுக்கு தான் இழப்பு ஏற்படும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு பெட்ரோல் நிரப்பும் போதும், எந்த அளவு நிரப்பப்பட்டது? அதன் தொகை எவ்வளவு? அந்த நேரத்தில், எந்த பம்பு மூலம் நிரப்பப்பட்டது? என்பது துல்லியமாக அலுவலகத்தில் உள்ள எந்திரத்தில் பதிவாகி இருக்கும். வாகனங்களை முறையாக பராமரிக்காத போது கிலோமீட்டர் அளவு குறையும். அதற்கு பெட்ரோல், டீசல் தான் காரணம் என்று சொல்ல முடியாது" என்றார்.

தேவையற்ற குழப்பம்

காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை பங்கு உரிமையாளர் அய்யாத்துரை கூறும்போது, "பெட்ரோல் பங்குகளில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிரப்பும் பெட்ரோல் அளவும் நவீன எந்திரத்தில் பதிவாகி இருக்கும். பம்பு மீட்டரில் செட் செய்த அளவை விட குறைவாக பெட்ரோல் நிரப்பினால் பம்பு செயல்பாடு நின்று விடும் என்பதால் யாராலும் முறைகேடு செய்ய முடியாது. வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. இதுகுறித்த தெளிவும், விழிப்புணர்வும் பலருக்கு இருப்பது இல்லை. பெட்ரோல், டீசல் நிரப்பும் முன்பு பூஜ்ஜியத்தை சரிபார்த்தாலே போதுமானது" என்றார்.

புகார் எண்கள்

உத்தமபாளையத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் அசோக் கூறும்போது, "உத்தமபாளையம் பகுதியில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் நிரப்பும் போது குளறுபடிகள் ஏற்படுகின்றன. கலப்படம் செய்து இருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. பெட்ரோல் விற்பனையில் குறைபாடுகள், குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள், முகவரி போன்ற விவரங்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கழிப்பறை முறையாக பராமரிப்பது இல்லை. கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து கொடுத்தால் தொலைதூர பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

எந்திரம் தவறு செய்யாது

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது, "அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம். அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும். அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

எண்ணெய் நிறுவனம் மறுப்பு

இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, "எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம். பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் பூஜ்ஜியம் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.


Related Tags :
Next Story