உரிய சிகிச்சை அளிக்கக்கோரி கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் தர்ணா


உரிய சிகிச்சை அளிக்கக்கோரி கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

உரிய சிகிச்சை அளிக்கக்கோரி கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

ஆரம்ப சுகாதார நிலையம்

கிள்ளையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கிள்ளை, எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இங்கு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுதில்லை என்றும், பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிகளை சரியான முறையில் பரிசோதனை செய்யாமல் வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று காலை 10 அளவில் கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்று திரண்டனர்.

முற்றுகை-தர்ணா

பின்னர் அவர்கள் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டும், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார மருத்துவ அலுவலர் அமுதா மற்றும் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார மருத்துவ அலுவலர் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story