திருத்தணியில் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்


திருத்தணியில் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்
x

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காலியான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவள்ளூர்

குற்றச்சம்பவங்கள்கண்காணிப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் திருத்தணி டி-1 போலீஸ் நிலையம் உள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு செயல்படுகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்குட்பட்டு திருத்தணி நகரம் மற்றும் 29 ஊராட்சி பகுதிகள் உள்ளன. நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பதற்கு இந்த பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 3 ஏட்டுக்கள், 10 போலீசார் உள்ளனர். இந்த பிரிவிற்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் என்பவர் பணியில் இருந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியிடம் மாறுதல் ஆகி சென்றுவிட்டார்.

திருட்டு, வழிப்பறி சம்பவங்கள்

இங்குள்ள பணிகளை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பார்க்கின்றனர். குற்றச்சம்பவம் தொடர்பான புகார் வந்தாலும், மேலும் பத்திரம், பள்ளிச் சான்று காணாமல் போனது குறித்து புகார் வந்தால் வழக்குப்பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தினந்தோறும் புகார் கொடுக்க அலைந்தவண்ணம் உள்ளனர்.

சமீப காலமாக நகரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் திருட்டு, பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை, வழிப்பறி என நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்

குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கூடுதலாக குற்றப்பிரிவையும் சேர்த்து கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் காலிப்பணியிடமாக இருக்கும் குற்றப்பிரிவிற்கு இன்ஸ்பெக்டர் உடனடியாக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story