திருத்தணி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


திருத்தணி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x

திருத்தணி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இங்கு மது குடிக்க வரக்கூடியவர்களால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முற்றுகையிட்ட பெண்கள் கூறியதாவது:-

காசிநாதபுரம் கிராமத்தில் மது குடிக்க வரக்கூடியவர்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே இங்கு இருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வந்தவுடன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை டாஸ்மாக் கடை மூடப்படும் என்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா தெரிவித்தார். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story