மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்-கலெக்டர் அறிவுரை


மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்-கலெக்டர் அறிவுரை
x

வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர்

கோடை வெப்பம் அதிகரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 19-ந்தேதி வெளியிட்ட அறிவிக்கையில், அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி கரும்பு சாறு, பழச்சாறுகள் குடிக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

வயதானவர்கள், குழந்தைகள்

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது. தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும் போது, உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

புரதம், மாமிச சத்துள்ள மற்றும் காரவகை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்குமாறும், சர்க்கரை நோய், இதய நோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வேலை செய்பவர்களுக்கு மயக்கம் வருதல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக தோன்றினால் அவ்வாறு வெப்பத்தால் தாக்கப்பட்டவரை நிழலான பகுதியில் இளைப்பாற வைத்து, குடிநீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை கொடுத்து உடலின் வெப்பத்தை சீராக கொண்டு வரவும், அருகே உள்ள மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

வளர்ப்பு பிராணிகள்

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரி பார்த்து கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா? என உறுதிப்படுத்தி கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story