வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு


வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு
x

2024-ம் ஆண்டிற்கான வரை வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது.

கரூர்

பட்டியல் வெளியீடு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2024-ம் ஆண்டிற்கான

வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையிலும், கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் பொருட்டு ஏற்கனவே உள்ள 1,047 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

விவரங்கள் தயார்

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால், மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களின் விவரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களை புதிதாக உருவாக்குதல், இணைத்தல், மாறுதல் செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இரண்டாக பிரிப்பு

இந்நிகழ்வில் கரூர் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 244 (தெற்கு காந்திகிராமம்)-ல் 1,546 வாக்காளர்கள் உள்ளதால் மேற்படி பாகம் எண் 244- னை இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

மேலும் 137, குளித்தலை தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 142 ஆனது வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக உள்ளதால் மேற்படி பாகம் எண் 142- னை இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருகிற 28-ந்தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி மறுவரையறை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருகிற 29-ந் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா, சந்தியா, தனித்துணை கலெக்டர் (சபாதி) சைபுதீன், தேர்தல் வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story