புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939048888 என்ற ‘வாட்ஸ்- அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதில்கள் வருமாறு:-

ஈரோடு

வாய்க்காலில் கலக்கும் சாயக்கழிவுநீர்

ஈரோடு பெரியசேமூர் முதலிதோட்டத்தில் இருந்து பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் இருந்து கானிராவுத்தர் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் செல்கிறது. இதனால் எல்.வி.ஆர்.காலனி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் நிலத்தடி நீர் மற்றும் ஆழ்குழாய் நீர் அந்தப்பகுதியில் உள்ள கிணறுகள் மாசுபடுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் சாயப்பட்டறைகளில் இருந்து இரவு நேரத்தில் அதிக அளவில் சாயக்கழிவு நீரை திறந்து விட்டு விடுகிறார்கள். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எல்.வி.ஆர்.காலனி, ஈரோடு.

தெருவிளக்கு எரியவில்லை

ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள தெருவிளக்கு கடந்த 4 மாதங்களாக எரியவில்லை. இதனால் பயணிகள் பஸ்கள் செல்லும் ஊர் பெயர் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். இருள் காரணமாக விபத்தும் நடக்கிறது. உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.சுப்பிரமணியன், ஈரோடு.

நல்லதண்ணீர் வினியோகிக்கப்படுமா?

பவானி தாலுகாவுக்கு உள்பட்டது காடையம்பட்டி. இந்த பகுதியில் ஆழ்துளைக் கிணறு மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் உப்புத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நல்ல தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், காடையம்பட்டி.

ஆபத்தான குழி

கோபியில் பாரியூர் ரோட்டில் மேட்டு வளவு என்ற இடத்தில் பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் குழியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டில் உள்ள குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

கற்கள் அகற்றப்படுமா?

ஆப்பக்கூடல் நால் ரோட்டில் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக கற்கள் குவிக்கப்பட்டன. ஆனால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. எனினும் அந்த கற்கள் அகற்றப்படவில்லை. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோபி, கவுந்தப்பாடி, அந்தியூர், பவானி போன்ற ஊர்களுக்கு செல்கின்றன. மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியில் கற்கள் கிடப்பதால் இடையூறு ஏற்பட்டு வருகின்றன. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், ஆப்பக்கூடல்.

ஆபத்தான மின்கம்பம்

அந்தியூர் அருகே பிரம்மதேசம் பாலம் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதன் காரைகள் கீழிருந்து மேல் பகுதி வரை முழுவதும் பெயர்ந்து கம்பி மட்டுமே வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை விரைவாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், அந்தியூர்.



Next Story