நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நவத்திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தென்திருப்பேரை:
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நவத்திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து விளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி பகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 9 நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த நவத்திருப்பதி கோவில்களில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நவத்திருப்பதி கோவில்கள்
நவத்திருப்பதி கோவில்களில் 8-வது ஸ்தலமான திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்காக வைத்தமாநிதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பெருமாளுக்கு தீபாராதனைகள் நடைபெற்றது. துளசி தீர்த்தம் அருந்தி பலரும் பெருமாளை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி வினியோகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்
கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் நவத்திருப்பதி கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.