மாணவர்களுக்கு தரமான உணவு, முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்


மாணவர்களுக்கு தரமான உணவு, முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மாணவர்களுக்கு தரமான உணவு, முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மணிகூண்டு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து இருந்ததை பார்வையிட்ட அவர் சமையல் அறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக உள்ளதா?, சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறைகள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தரமான உணவு

பின்னர் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க கல்வியில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயத்துள்ளபடி மாணவர்களுக்கு சுவையான சத்துணவு மற்றும் முட்டைகள் வழங்குவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பித்தல் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் மற்றும் வளாகங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தரமான ஆரம்ப கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story