தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்


தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கடைகளில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, காரவகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது. உணவை கையாள்பவர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாத வண்ணம் பணியில் அமர்த்தப்படவேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் பயன்படுத்தக்கூடாது.

விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும்.

உணவுபொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். பண்டிகைகாலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in இணையதளத்தில் தங்களது பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ளவேண்டும்.

மேலும் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story