ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது


ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது
x
தினத்தந்தி 30 Sep 2023 8:45 PM GMT (Updated: 30 Sep 2023 8:45 PM GMT)

குன்னூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.

நீலகிரி

குன்னூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.

ரேலியா அணை

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை விளங்குகிறது. சுமார் 43.7 அடி உயரம் கொண்ட இந்த அணை, நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் பந்துமி என்ற இடத்தில் உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணை ஆகும். இந்த அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு சுத்திகரித்து வழங்கப்படுகிறது.

நீர்மட்டம் குறைந்தது

இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை குன்னூர் பகுதியில் சரிவர பருவமழை பெய்யவில்லை. இதன் காரணமாக ரேலியா அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் நகர பகுதி மக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.

முழு கொள்ளளவு

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரேலியா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக தற்போது நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

இதையடுத்து இனிமேல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்க நகராட்சி நடவடிக்ைக எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


Next Story