மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்


மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)

வல்லநாடு அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரி மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. நடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

நடுமாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோ மீட்டர் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 5 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இதேபோல் சிறிய மாட்டு வண்டி போட்டியும் உற்சாகமாக நடந்தது.

நடு மாட்டுவண்டி போட்டியில் வடக்கு காரசேரி ஓட்டக்காரன் வசந்ததேவி, மூலக்கரை அருணாச்சலம், நாலாந்துலா உதயம் துரைப்பாண்டியன், செய்துங்கநல்லூர் குமார் பாண்டியன் ஆகியோரின் மாட்டு வண்டிகள் பரிசுகளை வென்றன. சின்ன மாட்டு வண்டி போட்டியில் வள்ளியூர் ஆனந்த், நாலாந்துலா உதயம் துரைப்பாண்டியன், நொச்சிகுளம் கந்தசாமி, வடக்கு காரசேரி ஓட்டக்காரன் வசந்ததேவி, செக்காரக்குடி அபிநயா ஆகியோரின் மாட்டு வண்டிகள் பரிசுகளை தட்டிச் சென்றன.

நடு மாட்டுவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.21 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.17 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் முதல் கொடி வாங்கும் நடு மாட்டுவண்டி, சின்ன மாட்டு வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story