ஊட்டி அருகே தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!


ஊட்டி அருகே தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ள ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!
x

ராகுல் காந்தி தற்போது ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார்.

கோவை,

அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யானார். நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார்.

இந்த நிலையில் அவர் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிட செல்வதற்காக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் செல்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 9.35 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி ஊட்டி புறப்பட்டு சென்றார். ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ராகுல் காந்தி முத்தநாடுமந்து கிராம மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர்களது கோவிலை பார்வையிடுகிறார். இதன்பின்னர் கூடலூர் வழியாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.


Next Story