ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?


ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?
x

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என்பது குறித்து பயணிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

நாமக்கல்

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்களை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையதளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது. வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம். தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் புக்கிங் தொடங்கும்.

தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும். உதாரணமாக 100 டிக்கெட்கள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் சாதாரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்களும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும். இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.

சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

மோகனூர் ரெயில் பயணிகள் நலசங்கத்தை சேர்ந்த முருகன் கூறியதாவது:-

பிரீமியம் தட்கல் திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படும் திட்டம். ஏழைகளுக்கு அது எட்டா கனியாகவே உள்ளது. சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் சேலம், நாமக்கல், மோகனூர், கரூர், பழனி வழியாக சென்று கொண்டிருக்கிறது, இந்த ரெயிலில் வெள்ளிக்கிழமை பிரீமியம் தட்கல் அதிக பணம் செலுத்துபவர்களுக்குக்கு தான் டிக்கெட் கிடைக்கும்.

சாதாரண டிக்கெட் ரூ.275 என்றால், தட்கல் ரூ.400, பிரீமியம் தட்கல் ரூ.500 லிருந்து ரூ.1,000 வரை கூட நேரத்தை பொறுத்து விலை உயரும். பொதுமக்கள் ரெயில் பயணத்தை தேர்ந்தெடுப்பதன் நோக்கமே டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பும் என்பதால் தான் ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இந்த பாதையில் ஒரே ரெயில் மட்டும் செல்வதால் அதிக அளவு பயணிகள் சென்று கொண்டிருக்கின்றார்கள். எனவே இன்னும் 2 ரெயில்கள் இந்த தடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகனூர் ரெயில் பயணிகள் நல சங்கம் சார்பில் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

எருமப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி இந்துமதி:-

அவசர பயணத்திற்காக மட்டும் பலர் தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்கின்றனர். இப்படியாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் முதலில் இருந்து டிக்கெட்டை புக் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்குள் டிக்கெட் காலியாகிவிடுகிறது. தட்கல் டிக்கெட்டிற்காக ஒரே நேரத்தில் ரெயில்வே இணையதளத்தை பொதுமக்களும், டிக்கெட் பெற்று தரும் ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் அதிவேகம் கொண்ட இணையதள சேவையை பயன்படுத்துபவர்கள் எளிதில் டிக்கெட்டை பெற்று விடுகின்றனர்.

சாதாரண பொதுமக்களால் சாதாரண வகை இணையதள சேவையால் டிக்கெட் பெற முடியாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நிலையை ரெயில்வே வாரியம் மாற்றி அமைக்க வேண்டும். சாதாரண வகை பயணிகளும் தட்கல் டிக்கெட்களை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிபாளையம் தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் பிரசாந்த்:-

நான் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவேன். பஸ்களில் பயணம் செய்தால் போதிய பாதுகாப்பு இருக்காது. அதேபோல் கட்டணமும் அதிகமாக இருக்கும். எனவே எப்போதும் ரெயில் பயணத்தையே விரும்புவேன். பெரும்பாலான நேரங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இணையதளம் வாயிலாக தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை. காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்யும் போது, விண்ணப்பம் வெளியேறி, 'சர்வர் கிடைக்கவில்லை' என்ற செய்தியைக் காட்டுகிறது. காலை 11.5 மணி வரை இதே நிலைதான். எனவே பிரீமியம் டிக்கெட் பதிவு செய்து போக வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதேபோல் தட்கல் சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் புக் செய்து உறுதியான பயணச்சீட்டை நீக்க விரும்பினால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது போன்ற பயணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் திரும்ப பெறவேண்டும்.

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன்:-

தட்கல் டிக்கெட் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு வழங்க தொடங்குவார்கள். இந்த நேரத்தில் அனைத்து தரப்பினரும் டிக்கெட் பெற மோதுவதால் பெரும்பாலான நபர்களுக்கு இது கிடைப்பது இல்லை. எனவே பொதுமக்களுக்கு காலை 11 மணி என்றும், ஏஜென்சிகளுக்கு பகல் 12 மணிக்கு மேல் என்றும் நேரம் தனித்தனியாக நிர்ணயம் செய்தால் பொதுமக்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தவறும் பட்சத்தில் பிரீமியம் தட்கல் என்ற முறையில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய அவலநிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது. இதனை ரெயில்வே நிர்வாகம் மாற்றி பயணிகளுக்கு உதவ வேண்டும். பிரீமியம் தட்கல் முறையை ரத்து செய்து விட்டு தட்கல் முறையை யே பயன்படுத்தி டிக்கெட்களை முறையாக வழங்கி பயணிகளின் ஆதரவைப் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் கூறியதாவது:-

திடீர் என்று பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இருக்கைகள் ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் நிரப்பப்படும். தட்கல் பிரீமியம் என்பது ஒரு வித்தியாசமான கோட்டா முறையாகும். இதில் மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ரெயில்களில் பிரீமியம் தட்கல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வகுப்பின் அதிகபட்சம் 30 சதவீதம் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறை இருக்கும். தற்போது சர்வர் பிரச்சினை இல்லை. தட்கல் டிக்கெட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கிடைக்கின்றன.

நேரடியாகவும், இணைய முன்பதிவு மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பிரீமியம் தட்கல் கோட்டாவுக்கு, அட்டவணைகள் தயாரிக்கும் போது தட்கல் காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். சாதாரண தட்கல் கோட்டாவில் காத்திருப்பு பட்டியல் இல்லை என்றால், இந்த இருக்கைகள் பொது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story