சென்னை புறநகர் பகுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து; 8 டி.எம்.சி. கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்


சென்னை புறநகர் பகுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து; 8 டி.எம்.சி. கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்
x

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதேபோல் புழலில் 10 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 5.2 மி.மீ. மழை பதிவானது.

மேலும் தாமரைப்பாக்கம் 12 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு 5 மி.மீ. மற்றும் நுங்கம்பாக்கம் 11.3 மி.மீ., மீனம்பாக்கம் 12.2 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 260 கன அடியும், மழை நீராக 270 கன அடி உள்பட 530 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரிகளின் நீர் மட்டம்

3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3) டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு 530 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 2,201 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.) ஆக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 22 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 126 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது.

அதேபோல் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளவு கொண்ட புழல் ஏரிக்கு 96 கன அடி வீதம் நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 1,861 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 15 கன அடி நீர் வரத்து மூலம் 343 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

8 டி.எம்.சி. இருப்பு

3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 114 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 700 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.) இருப்பு இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 149 கன அடி நீர் வீதம் திறக்கப்படுகிறது.

இதேபோல் 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட வீராணம் எரியில் இருப்பு 935 மில்லியன் கன அடி இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 124 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 6 மில்லியன் கன அடி (9 டி.எம்.சி.) நீர் இருந்தது. ஆனால் தற்போது 8 ஆயிரத்து 166 மில்லியன் கன அடி (8.1 டி.எம்.சி.) கையிருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story