நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீலகிரி மலைப்பகுதியில் மழை:  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

102 அடி

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும், அணை நிரம்பிய பின் திறக்கப்படும் உபரி நீரும் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது. நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காலை 9 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் 57 நாட்களுக்குப் பின்பு கடந்த வாரம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைந்தது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 481 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.24 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மதியம் 2 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.11 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


Next Story