ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை பிற பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது -ராமதாஸ் வலியுறுத்தல்


ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை பிற பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது -ராமதாஸ் வலியுறுத்தல்
x

ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை பிற பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள, ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் வழங்கப்பட்ட அவரது சொத்துகளை, முதல்-அமைச்சரின் முத்திரைத் திட்டங்கள் என்ற பெயரை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தங்களுக்கு கடந்த 12-ந்தேதி நான் எழுதிய கடிதத்திற்கு, அதே நாளில் தமிழக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழுதிய பதில் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

அதே நேரத்தில், எனது கடிதத்தில் நான் எழுப்பியிருந்த முதன்மையான வினாக்களுக்கு இந்து சமயம் - அறநிலையத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள், அவரது விருப்பத்திற்கு மாறாக திரைப்பட நகரம் அமைத்தல், சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்துதல், வீடுகளைக் கட்டுதல் போன்ற பணிகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

எந்தக் காலத்திலும், எதற்காகவும் ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர்த்து வேறு எந்தப் பணிகளுக்கும் வழங்கப்படாது என்பதை அரசு பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story