ராமநாதபுரம்: குரு பூஜைக்கு சென்று திரும்பிய கார் மோதி முதியவர் பலி


ராமநாதபுரம்: குரு பூஜைக்கு சென்று திரும்பிய கார் மோதி முதியவர் பலி
x

திருவாடானை அருகே குரு பூஜைக்கு சென்று திரும்பிய கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் தேவர் குருபூஜை விழாவிற்கு பசும்பொன் சென்று விட்டு திரும்பி வந்த கார் அதிவேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து கடை பகுதியில் புகுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோரம் கடைப்பகுதியில் நின்று கொண்டிருந்த பருத்தியூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் (70) மற்றும் சேந்தனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (65) ஆகிய 2 பேர் மீது பலமாக மோதியது.

இதில் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவர் குருபூஜை விழாவிற்காக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி சிதம்பரம் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வேல்முருகனை மேல்சிகிச்சைக்காக காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story