தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ராமேசுவரம் கடல் பகுதி


தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ராமேசுவரம் கடல் பகுதி
x

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்ட கடல் பகுதியில் 8 ரோந்து கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்ட கடல் பகுதியில் 8 ரோந்து கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன.

சுதந்திர தின விழா

நாளை மறுநாள்(15-ந்தேதி)75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதுபோல் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் உள்ள முக்கிய இடங்களில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு சொந்தமான 4 ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மற்றும்2 அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதை தவிர சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அதிநவீன கப்பல் ஒன்றும், இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீனகப்பல் ஒன்றும் ராமேசுவரம், தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட ஆழ் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து டார்னியர் விமானம் மற்றும் ஆள் இல்லாத விமானமும், அதிநவீன ஹெலிகாப்டரும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story