ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம்


ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:47 PM GMT)

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்கழி மாத அஷ்டமி

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. காலை 4.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை 7 மணிக்கு ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு படி அளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

படியளக்கும் நிகழ்ச்சி

கோவிலில் இருந்து எழுந்தருளும் சுவாமி-அம்பாள் வர்த்தகன் தெரு, நடுத்தெரு, ராமதீர்த்தம், லட்சுமணத்தீர்த்தம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.

சுவாமிஅம்பாள் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story