புதுச்சேரி சிலை விற்பனை நிறுவனத்தில் இருந்து 2 தொன்மையான சிலைகள் மீட்பு


புதுச்சேரி சிலை விற்பனை நிறுவனத்தில் இருந்து 2 தொன்மையான சிலைகள் மீட்பு
x

நின்ற நிலையில் இருக்கும் அப்பர் சிலை மற்றும் புத்தர் சிலை ஆகிய 2 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

புதுச்சேரி,

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தனியார் சிலை விற்பனை நிறுவனத்தில் இருந்து நேற்றைய தினம் 6 தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டன. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராமலிங்கம் இது போன்ற பல்வேறு தொன்மை வாய்ந்த சிலைகளை தொன்மையில்லாத சிலைகள் என்று தடையில்லா சான்றிதழ் பெற்று விற்பனை செய்யவும், இதற்காக அவர் தொல்லியல் துறையை நாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல வேறு சில சிலைகளுக்கு தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெற ராமலிங்கம் முயற்சி செய்ததற்கான ஆவணங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்து. அந்த ஆவணங்களைக் கொண்டு புதுச்சேரிக்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அங்கு அருங்காட்சியகம் மற்றும் சிலை விற்பனையகமாக செயல்பட்டு வரும் தனியார் நிறுவத்திடம் இருந்து 2 தொன்மை வாய்ந்த சிலைகளை மீட்டுள்ளனர்.

நின்ற நிலையில் இருக்கும் அப்பர் சிலை மற்றும் நின்ற நிலையில் இருக்கும் புத்தர் சிலை ஆகிய இந்த 2 சிலைகளுகளில் உள்ள சிலை நுட்பங்களை வைத்து, அவை 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணைகளில் மேலும் பல்வேறு சிலைகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.


Next Story