பூந்தமல்லியில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு


பூந்தமல்லியில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு
x

பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி கோவில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவள்ளூர்

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாததால் இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தது.

இதையடுத்து நேற்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி தலைமையில் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில் வந்த கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடங்களுக்கு 'சீல்' வைத்தனர். தற்போது ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story