வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்பு


வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்பு
x

குளித்தலை அருகே குளிக்க சென்றபோது வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.

கரூர்

குளிக்க சென்றார்

கரூர் மாவட்டம், குளித்தலை மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே செல்லும் தென்கரை வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரைத்தேடி உள்ளனர். அப்போது வாய்க்காலுக்கு அருகே அவருடைய உடைகள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஒரு வேலை அவர் தவறி வாய்க்கால் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கலாம் என்று கருதி குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாய்க்கால் தண்ணீரில் தியாகராஜன் உடலை தேடி பார்த்தனர். வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

உடல் மீட்பு

இதையடுத்து வாய்க்காலில் தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று குளித்தலை அருகே உள்ள மருதூர் பகுதியில் தியாகராஜனின் உடல் தண்ணீரில் மிதப்பது தெரியவந்துள்ளது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தண்ணீருக்குள் மூழ்கி இறந்த தியாகராஜனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்வதற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story