புதுச்சேரியில் செம்மண் நிறமாக மாறிய கடல்..!


புதுச்சேரியில் செம்மண் நிறமாக மாறிய கடல்..!
x
தினத்தந்தி 17 Oct 2023 7:59 AM GMT (Updated: 17 Oct 2023 8:13 AM GMT)

புதுச்சேரியில் திடீரென செம்மண் நிறமாக கடல் மாறியதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுச்சேரி கடற்கரையைதான்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர். அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும்போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது.

ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது, "ஆரோவில் பகுதியில் மழை பெய்ததால், அங்குள்ள செம்மண் மேட்டு பகுதிகளில் உள்ள மணல் சரிந்திருக்கும், இதனால் அந்த செம்மண் நீர் நகர்ந்து கடலுக்கு வந்திருக்கும். கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது. அலையில் செம்மண் கடற்கரையில் தேங்கியதும் நிறம் மீண்டும் நீலமாக மாறும்" என்றனர்.


Next Story