மின்சாரம் தாக்கி ஊழியர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மின்சாரம் தாக்கி ஊழியர் பலி: உடலை   வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2022 6:45 PM GMT (Updated: 5 Oct 2022 6:46 PM GMT)

மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி

மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழியர் பலி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). இவர் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டதை சரிசெய்ய சக மின் ஊழியர் சீதாராமன் என்பவருடன் ராமசாமி சென்றார். அங்கு மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ராமசாமி கீழே விழுந்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதையடுத்து, ராமசாமி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை மின்சாரத்துறை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள், பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மின்வாரிய ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் நெல்ைல அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story