மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு
x

அரசு பணியில் இருப்பதாக கூறி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல்லவராயன்பத்தையை சேர்ந்த அழகா்சாமியின் மனைவி சித்ரா. இவரது கணவர் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெறுவதற்காக சித்ரா விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவருக்கு பணம் கிடைக்கவில்லையாம். இவரது செல்போன் எண்ணிற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்கவில்லை. காரணம் குடும்பத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ளனர். இதுகுறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிந்து கொள்ள இணையதள முகவரி மற்றும் முதல்-அமைச்சரின் முகவரி உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால் தான் அரசு பணியில் இல்லை எனவும், குடும்பத்திலும் யாரும் அரசு பணியில் இல்லை என்றும், அரசு ஓய்வூதியம் பெறும் நபர்களும் இல்லை எனவும், தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து, இத்திட்டத்தில் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சித்ரா இன்று மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


Next Story