பெண் கொலை வழக்கில் உறவினர் கைது


பெண் கொலை வழக்கில் உறவினர் கைது
x

பெண் கொலை வழக்கில் உறவினர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

ஜீவனாம்சம்

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவர், அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து கடந்த 1997-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் சில மாதங்களில் முனியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜீவனாம்சம் கேட்டு ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், அவருக்கு ரூ.11 லட்சம் ஜீவனாம்சம் தர கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.11 லட்சத்தை ராமகிருஷ்ணன் குடும்பத்தினரிடம் இருந்து ராசாத்தி ஜீவனாம்சமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதற்கிடையே ராசாத்தி ஜீவனாம்சம் வழக்கு தொடர அவரின் முதல் கணவர் முனியப்பனின் தம்பி நாகராஜ் (வயது 47) மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகியோர் உதவியாக சென்று வந்ததாகவும், அந்த வகையில் ரூபாவதிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகி உள்ளது என்றும் கூறி, அந்த பணத்தை ராசாத்தியிடம் நாகராஜ் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர ராசாத்தி மறுத்த நிலையில் இது சம்பந்தமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி கோவில் எசனையில் இருந்து வெங்கனூர் சாலையில் சுடுகாடு அருகே வயல் வேலை முடிந்து சென்றபோது, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வெங்கனூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கைது

இதில் நாகராஜ் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து நேற்று காலை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கரை மரத்தடியில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராசாத்தி பணம் தருவதாக கூறிவிட்டு, பின்னர் பணம் தரமுடியாது என்று கூறி விட்டதாகவும், இதனால் அவரை நாகராஜ் வெட்டிக்கொன்றதாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story