தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலம்


தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலம்
x

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது. கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:-

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தொழிலாளியை குக்கர் மூடியால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது. கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளி சாவு

சேலம் நெத்திமேடு கே.பி. கரடு காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 36), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சர்மிளா (32). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 1-ந் தேதி இரவு தலையில் பலத்த காயத்துடன் பிரகாஷ்ராஜ் வீட்டு முன்பு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவர் மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரகாஷ்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில், பிரகாஷ்ராஜ் தாயார் மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரகாஷ்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே பிரகாஷ்ராஜ் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் ஏற்பட்ட காயம் கீழே விழுந்ததில் இல்லை என்றும், பலமாக தாக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் பிரகாஷ்ராஜ் மனைவி சர்மிளா, உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

பிரகாஷ்ராஜூக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த அன்றும் பிரகாஷ்ராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சர்மிளாவின் மூத்த சகோதரி தனலட்சுமி, அவருடைய கணவர் கண்ணன், மகன் திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

அப்போது ஏன் இப்படி மது அருந்தி விட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறாய் என கண்ணன் மற்றும் குடும்பத்தினர் பிரகாஷ்ராஜூடம் கேட்டுள்ளனர். அப்போது கண்ணனுக்கும், பிரகாஷ்ராஜூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

குக்கர் மூடியால் தாக்குதல்

தகராறு முற்றவே கண்ணனை, பிரகாஷ்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கண்ணன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த கண்ணனின் மகன்கள் திருநாவுக்கரசு, 18 வயது நிரம்பாதவர் இருவரும் சேர்ந்து பிரகாஷ்ராஜை தாக்கினர்.

மேலும் வீட்டில் இருந்த குக்கர் மூடியை எடுத்து பிரகாஷ்ராைஜ சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரகாஷ்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மயங்கி விழுந்தார். தவறி விழுந்து காயம் அடைந்ததாக உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கொலை வழக்கமாக மாற்றம்

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் பிரகாஷ்ராஜை கொலை செய்ததாக கண்ணன் (40), அவருடைய மனைவி தனலட்சுமி (38), மகன் திருநாவுக்கரசு (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணனின் இன்னொரு மகன் 18 வயது நிரம்பாதவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுபோதையில் குடும்பத்தை கவனிக்காத தொழிலாளியை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story