பெண் ஊழியரின் கழிவறை காட்சியை ரகசியமாக பார்த்த வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள் - கைதான நிலையில் சிகிச்சை


பெண் ஊழியரின் கழிவறை காட்சியை ரகசியமாக பார்த்த வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள் - கைதான நிலையில் சிகிச்சை
x

சென்னையில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியரின் கழிவறை காட்சியை ரகசியமாக பார்த்த வாலிபரை, அந்த பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்தனர். அந்த வாலிபர் கைதான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடாஸ் சாலையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் ஜடேஜா பரத்சிங் (வயது 28). குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியரின் அழகில் மயங்கி, அவர் கழிவறைக்கு செல்லும்போது ரகசியமாக பார்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இதுபோல கழிவறைக்கு சென்ற பெண் ஊழியரை ஜடேஜா ரகசியமாக பார்த்து ரசித்தார். இந்த விசயத்தை பெண் ஊழியர் கண்டுபிடித்து விட்டார். அவர் உடனே தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவரது தந்தை, தனது உறவினர்களை அழைத்து வந்து பெரிய அளவில் தகராறில் ஈடுபட்டார்.

கழிவறையில் பெண் ஊழியரின் அழகை ரகசியமாக பார்த்து ரசித்த வாலிபர் ஜடேஜாவை, பெண் ஊழியரின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது பற்றி தகவல் தெரிந்து உதவி கமிஷனர் ரவிஅபிராம் மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பெண் ஊழியரின் அழகை ரசித்த வாலிபர் ஜடேஜா கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் உள்ளார். அவரை அடித்து உதைத்த பெண் ஊழியரின் உறவினர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story