கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
பாசன வசதி
அரியலூர்-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் மீன்சுருட்டி அருகே கீழணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடியாகும். இந்த அணையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தென்னவநல்லூர், வேப்பக்குடி, கொல்லாபுரம், பிள்ளையாபாளையம், வீரசோழபுரம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன. கல்லணையை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் இந்த கீழணையில் தேக்கப்படுகிறது.
இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக செல்வதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு, அங்கிருந்து சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, சென்னைக்கும் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
வீணாக கடலுக்கு செல்கிறது
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழணையில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாத நிலையில், பொதுப்பணித்துறையினரால் திறக்கப்படும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி வீதம் வீணாக கடலுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.






