குடகனாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


குடகனாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x

வேடசந்தூர் அருகே, குடகனாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. 15 ஷட்டர்களை கொண்ட இந்த அணை 27 அடி உயரம் கொண்டதாகும். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து, குடகனாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால், தற்போது 19 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி, உதவி பொறியாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் அணையின் ஒரு ஷட்டர் வழியாகவும், வலது பிரதான வாய்க்கால் மூலமும் தண்ணீரை திறந்து விட்டனர். நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பாலப்பட்டி, அம்மாபட்டி, ஆர்.வெள்ளோடு, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story