ரூ.4 கோடியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி


ரூ.4 கோடியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி
x

வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 7 மாதங்களில் நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 7 மாதங்களில் நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்

மத்திய அரசு 'அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின்' கீழ் நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்த மற்றும் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 6-ம் தேதி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், வேலூர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட 15 ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் புதுப்பிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரெயில் நிலையம் புதுப்பிக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோட்டை போன்ற முகப்பு தோற்றம்

இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலைய நுழைவுவாயில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை போன்ற முகப்பு தோற்றத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

மேலும் முதலாவது நடைமேடையில் முன்பதிவு பயணிகள் காத்திருக்கும் அறையின் அருகே இருந்து 32 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்தில் புதிதாக மேற்கூரை அமைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு குளியல் அறை வசதிகளுடன் நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது.

ரெயில் நிலையத்தின் உள்பகுதி மற்றும் உயர்மட்ட நடைமேடை, படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுகிறது. ரெயில் நிலைய கட்டிடங்களில் உள்ள மரக்கட்டைகளால் ஆன ஜன்னல்கள் அகற்றப்பட்டு, அவற்றை விட பெரிய அளவில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட உள்ளது.

செல்பி பாயிண்ட்

ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் 'ஐ லவ் வேலூர்' என்ற செல்பி பாயிண்டும், ரெயில் நிலைய வளாகத்தில் புல்தோட்டமும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள், வண்ண, வண்ண மின்விளக்குகளால் கட்டிடம் அலங்கரிக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரெயில் நிலைய நுழைவுவாயில் கட்டிடம் இடித்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது என்று கூறினர்.

1 More update

Next Story