குடியரசு தின விழா


குடியரசு தின விழா
x

குடியரசு தின விழா நடந்தது.

திருச்சி

குடியரசு தின விழா

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஆயுதப்படை மைதானம் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

அணிவகுப்பு மரியாதை

அதன் பின்னர் ஆயுதப்படை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் மா.பிரதீப்குமார் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தி, நினைவு பரிசு வழங்கினார்.

பதக்கம், பாராட்டு

அதன் பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 98 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் என்று 301 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதைத்தவிர ரூ.32½ லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் எதிரே உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து கலெக்டர் மரியாதை செலுத்தினார்.

கலை நிகழ்ச்சிகள்

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 7 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டுப்பற்று, தேச ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சிலம்பாட்டம் உள்பட வீர விளையாட்டுகளும் இடம் பெற்றன. இதனை விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

விழாவில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா, துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ரா.அபிராமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story