பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2023 7:30 PM GMT (Updated: 21 Oct 2023 7:31 PM GMT)

வன விலங்குகளால் ஏற்பட கூடிய பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

வன விலங்குகளால் ஏற்பட கூடிய பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, இணை இயக்குனர்கள் தோட்டக்கலைத்துறை பூபதி, வேளாண்மைத்துறை கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கதிர் அடிக்கும் எந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பிட வேண்டும். தற்போது ஏரிகளின் நீரின்றி வறண்டும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. செண்டுமல்லி பூக்கள் தற்போது கடும் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்கீடு

திருப்பதியில் சாமிக்கு பயன்படுத்தும் மலர்கள் அனைத்தும், ஊதுப்பத்தி தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல், அரசு சார்பில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொடங்க வேண்டும். பூக்கள் விலை சரிவின் போது, ஊதுப்பத்தி தயாரிக்க பயன்படுத்தினால், அரசுக்கும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சின்னகுட்டபை என்னுமிடத்தில் விவசாயம் செய்ய 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு விவசாயிகள் ராகி, சோளம், கம்பு உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மான், மயில், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். ஊத்தங்கரையில் இருந்து பாலக்கோட்டிற்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

10 பேர் பலி

இந்த ஆண்டில் யானைகள் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். யானைகள் வெளியேறுவதை தடுக்க அமைக்கப்பட்ட சோலார் தடுப்பு வேலிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக யானை வெளியேறுகிறது. சோலார் தடுப்பு வேலியை பராமரிக்க போதிய நிதி ஆதாரத்தை மாவட்ட நிர்வாகம், வனத்துறையினருக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் சரயு பேசியதாவது:- தென்பெண்ணை ஆற்று உபரிநீர், எண்ணேகொல்புதூர், ஆழியாளம், பாரூர் உள்ளிட்ட நீர்நிலை விடும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. நீரின்றி காணப்படும் ஏரிகளின் விவரங்கள் அளித்தால் தேவையான நடவடிக்கை வேண்டும். ஊதுப்பத்தி தொழிற்சாலை தொடங்குவது குறித்து சாத்தியகூறுகள், ஆய்வு மேற்கொள்ளப்படும். சின்னகுட்டபையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மூலம் மனு அளித்தால், தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சேலார் தடுப்பு வேலிகள், 100 நாட்கள் வேலையாட்கள் மூலம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை அனைத்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story