3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் மீட்பு


3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் மீட்பு
x
தினத்தந்தி 20 Dec 2023 9:07 AM GMT (Updated: 20 Dec 2023 10:04 AM GMT)

தென் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழை புரட்டிப்போட்டுவிட்டது.

இந்த மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 2½ லட்சம் கனஅடி தண்ணீர் ஓடியது.

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமான இடங்களில் இன்னும் வெள்ளம் வடிந்தபாடில்லை. பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்களும், எம்.பி, எம்எல்ஏக்கள், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது இல்லத்தில் இருந்து வெளியே வர இயலாதபடி சிக்கித் தவித்தார்.

3 நாட்களாக தனது வீட்டிலேயே சிக்கியிருந்த நிலையில், அவரை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் இன்று மீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக சொந்த ஊர் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்டு 3 நாட்களாக சிக்கித் தவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story